Thursday, August 19, 2010

இன்றைய இந்திய கால்பந்து அணி - சில செய்திகள்

ஐரோப்பாவில் நடக்கும் யூரோ கோப்பை போல் ஆசியாவில் நடக்கும் ஆசிய கோப்பை ஆசிய அளவில் நடந்திடும் போட்டிகளில் முக்கியமான போட்டியாகும்.


1984 - இதுதான் இந்திய கால்பந்து அணி இறுதியாக விளையாடிய ஆசிய கோப்பை. இதுதான் இந்திய அணி பங்கு கொண்ட சற்று பெரிய போட்டியும் கூட. அதிசயமாக 2011ல் கதாரில் நடக்க கூடிய ஆசிய கோப்பைக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 2008ல் AFC challenge cup போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த அறிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் பாப் ஹட்டன் வழக்கமாக வெவ்வேறு கிளப் அணிகளுக்காக விளையாடும் நமது அணி வீரர்களை ஒன்பது மாதங்கள் ஒருகிணைத்து பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார்.


தற்போது போர்ச்சுகல் நாட்டில் பயிற்சி எடுத்துகொண்டிருக்கும் நமது அணி பற்றிய லேடஸ்ட் தகவல் என்னவென்றால் செப்.14 ஆம் தேதியன்று டெல்லியில் வட கொரிய தேசிய அணியுடன் நமது அணி விளையாட போகிறது என்பதாகும். உலக கோப்பை அணி ஒன்றுடன் இந்திய அணி மோதுவது நீண்ட நாட்களுக்கு பின் இப்போது தான். இதற்கு முன்பாக தாய்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. 2009 ல் நேரு கோப்பைக்கு பின் இந்திய அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இவை மூன்று தவிர வேறு சில சர்வதேச போட்டிகளிலும் விளையாட உள்ளது. இப்போட்டிகள் நமது அணியினருக்கு சிறந்த பயிற்சி தரும் என்பதில் சந்தேகம் இல்லை.


பயிற்சியில் இந்திய அணி




இந்திய கிரிகெட் அணி கிட்டதட்ட தினமும் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடி வருகிறது. கால்பந்து அணியோ இவ்வளவு நாட்களுக்கு பின் விளையாடுகிறது. இந்த நிலையில் நமது அணி வீரர்களுக்கு ஊக்கம் ரொம்ப முக்கியமாகும். இதை நமது ஊடகங்கள் ரசிகர்கள் அனைவரும் உணர வேண்டும். தற்போதைய நிலையில் இந்த போட்டிகள் தொலைகாட்சியில் ஒளிபரப்படுமா என தெரியவில்லை. நண்பர்கள் யாரேனும் தகவல் தெரிந்தால் கூறவும்.

ஆசிய கோப்பையில் இந்தியாவின் குரூப் ஆசிய கோப்பையின் மரண கிணறு என கூறப்படுகிறது. இங்கு இந்தியாவின் FIFA தரவரிசை138 என்பது முக்கியமான தகவல் ஆகும்.

ஆஸ்திரேலியா (FIFA தரவரிசை 20)
தென் கொரியா (FIFA தரவரிசை 44)
பக்ரைன் (FIFA தரவரிசை 68)
தென்கொரியா அணி தற்பொது ஆஸ்திரேலிய அணியை விட அலுவான நிலையில் உள்ளது. பக்ரைன் சிறந்த வளரும் அணி எனும் விருதை சமீபத்தில் FIFA விடம் இருந்து வாங்கியுள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை வெறும் 7 லட்சம் ஆகும் (சென்னையின் மக்கள் தொகை 40 லட்சம்). இந்த குரூப்பில் இந்தியா ஏதேனும் ஒரு போட்டியை சமன் செய்தாலே பெரிய விஷயம். ஆனாலும் அனைத்து போட்டிகளிலும் வென்று வர வாழ்த்துவோம்.

இந்தியாவின் புகழை உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கால்பந்து கிடையாது. இதை நல்ல செய்தியாகவும் கெட்ட செய்தியாகவும் எடுத்துகொள்வது அவரவர் விருப்பம்.

அதே சமயம் சினாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா விளையாடுவதாக தெரிகிறது. இப்போட்டியில் 23 வயதிற்கு உட்பட்ட அணியே விளையாடும். ஆசிய போட்டி கால்பந்துவின் முதல் தங்கம் வென்ற பெருமையுடன் இந்தியா களம் இறங்குகிறது.

ஆக, முக்கியமான போட்டிகளில் களம் இறங்கும் இந்திய அணியை ஊக்குவிப்போம். மக்கள் கிரிக்கெட் தவிர எந்த விளையாட்டையும் பார்ப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. என் கருத்துப்படி மக்கள் மேற்கண்ட போட்டிகளை பார்க்க தயாராகவே உள்ளனர். மீடியாக்களும் தொலைகாட்சிகளும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சரியாக செய்ய வேண்டும்

1 comment:

Unknown said...

அருமையான கட்டுரை